Monday, September 28, 2009

தூதுவளை இலைக் குழம்பு

மூலிகை மருத்துவத்தில் தூதுவளைக்கும் முக்கியமான பங்கு உண்டு. இருமல், சளி, தொண்டை நோவுக்கு இலைகளை அவித்து எடுத்து கைமருந்தாகக் குடிப்பர். (சமையறை மருத்துவம் பதிவில் பார்க்கவும்).

இது ஈரலிப்பான இடங்களில் கொடியாகப் படரும் தன்மையுடைய ஒரு செடியாகும். இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற ஆசிய நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது.


கிராமப்புறங்களில் பெரும்பாலும் சமையலில் அடிக்கடி இடம் பிடித்துக் கொள்ளும். இச்செடியின் பூக்கள் நீல (ஊதா) நிறத்தில் இருக்கும். பூவின் நிறம் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது.



கொடியிலும் இலையிலும் முட்கள் காணப்படும்.

அதனால் இதன் இலைகளைப் பறித்து எடுப்பது சிரமமான காரியம்தான்.

இச்செடியை ஆங்கிலத்தில் Purple Fruited Pea Eggplant என அழைப்பர். இதனது தாவரவியல் பெயரானது Botanical name: Solanum trilobatum ஆகும். இது Solanaceae (Potato family) குடும்பத்தைச் சேர்ந்தது.


வீட்டுத் தோட்டங்களில் இயற்கையாக முளைத்து நின்று பயன்கொடுக்கும்.

பெரும்பாலும் சம்பல் (சட்னியாக) அரைத்து எடுத்து உண்பார்கள்.


அதன் காய்கள் கசப்பானவை. காய்களை வெயிலில் உலர்த்தி வற்றலாக்கி எடுத்து, கசப்பு நீங்க நெய்யில் பொரித்து எடுத்து உண்பார்கள்.

வெளிர்ப் பச்சைக் காய்கள் பழுக்கும்போது கண்ணைக் கவரும் சிவப்பு நிறமாக மாறும்.

இலையில் ரசம், பாற்சொதி, சூப் என்பனவும் தயாரிக்கலாம்.

இலையைப் பொரித்து எடுத்து பொரியலாகவும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

இன்று குழம்பு தயாரித்துக் கொள்ளுவோம்.

தூதுவளை இலைக் குழம்பு

குழம்பு தடித்து வருவதற்காக வாழைக்காய் அல்லது கிழங்கு சேர்த்துக் கொண்டால் சுவையும் கூடும். அல்லது வெங்காயம், பூண்டு கூடியளவு சேர்த்து செய்து கொள்ளலாம்.

கையில் முள் குத்தாதவாறு மிகவும் கவனமாக கையாளுங்கள்.

வேண்டியவை



1. தூதுவளை இலை – 2 கப்
2. வாழைக்காய் அல்லது கிழங்கு – 1
3. பூண்டு – 5 பல்லு
4. பம்பாய் வெங்காயம் - 1
5. பச்சை மிளகாய் - 1
6. தேங்காய்ப்பால் - ¼ கப்
7. கடுகு – சிறிதளவு
8. வெந்தயம் - 1 ரீஸ்பூன்
9. எண்ணை – ¼ லீட்டர்
10. மிளகாய்ப் பொடி - 2 ரீஸ்பூன்
11. தனியா பொடி - 1 ரீஸ்பூன்
12. மஞ்சள்பொடி – சிறிதளவு
13. உப்பு தேவைக்கு எற்ப
14. புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

செய்து கொள்வோம்

இலையை பாதியாக மடித்து வெளிப்புறத் தண்டை முள்ளுடன் கிழித்து எடுத்துவிடுங்கள். (கத்தரிக்கோல் உபயோகித்து வெட்டிக் கொள்ளலாம்)

பின்பு இலையைக் கழுவி நன்கு நீர் வடிய விட்டுவிடுங்கள்.

வாழைக்காயை சிறிய துண்டங்களாக வெட்டுங்கள்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் தனித்தனியாக வெட்டி வையுங்கள்.

ஒன்றரைக் கப் நீரில் புளியைக் கரைத்து வையுங்கள்.

எண்ணையை விட்டு கொதிக்க, வாழைக்காயை பொரித்து எடுத்து வையுங்கள்.

இலையையும், பொரித்து எடுத்து பேப்பர் ரிசூவில் போடுங்கள்.

சிறிதளவு எண்ணையில் கடுகு, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் என்ற நிரையில் தாளித்து இறுதியாக வெந்தயம் சேர்த்து, புளிக் கரைசல் விடுங்கள்.

இத்துடன் மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள், உப்பு சேர்த்து வாழைக்காய், பொரித்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.

ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்து வர இறக்கி வையுங்கள்.

பொரித்த இலை வாசத்துடன் குழம்பு கமழும்.

பூண்டு வெங்காய வாசமும் தூக்கி நிற்கும்.

சாதம், பிட்டு, இடியாப்பம், பிரட்டுக்கு இக் குழம்பு சுவை கொடுக்கும்.

மாதேவி

12 comments:

  1. நல்ல மருத்துவ குறிப்பா தேடி பிடித்து போட்டு அசத்துறீங்க போங்க..

    நல்ல குறிப்பு

    ReplyDelete
  2. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி ஜலீலா.

    ReplyDelete
  3. வாருங்கள் தூயா மிக்க மகிழ்ச்சி.உங்கள் பாராட்டுக்கும் நன்றி கூறுகின்றேன்.

    ReplyDelete
  4. ஆஹா....

    பயனுள்ள சமையல் குறிப்பு

    ReplyDelete
  5. வாங்க பிரியமுடன்...வசந்த். மிக்கநன்றி.

    விமர்சனம் எழுதுபவர்களே "பயனுள்ள சமையல் குறிப்பு" என்று கூறியதால் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன்.

    ReplyDelete
  6. பயனுள்ள சமையல் குறிப்பு!!

    ReplyDelete
  7. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Mrs.Menagasathia.

    ReplyDelete
  8. மாதேவி,சம்பல் அரைத்துச் சாப்பிட்டு இருக்கிறேன்.குழம்பு புதிது.இங்கு தூதுவளை ,குறிஞ்சா இலைகள் இறக்குமதி செய்யப்பட்டு எங்கள் கடைகளில் வாங்கலாம்.

    ReplyDelete
  9. தூதுவளை ,குறிஞ்சா இலைகளுக்கும் விமானப் பயணம் கிடைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது, ஹேமா.

    ReplyDelete
  10. இன்று வலைச்சரத்தில் தங்களின் இந்த சிறப்பான பதிவு. நேரம் கிடைத்தால் பாருங்கள்.மறக்காமல் தமிழ்மணத்தில் வாக்கினையும் பின்னூட்டமும் இடுங்கள். http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_15.html

    ReplyDelete
  11. நல்ல ருசியான பதிவு ...

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்